தோஷங்கள் எவ்வாறு நம் வாழ்க்கையைப் பாதிப்பதாக நம்புகிறோமோ, அதேப் போல யோகங்களும் நம் வாழ்க்கயை பாதிக்கின்றன. அவைகளில் பல யோகங்கள் நல்லப் பலன்களை மட்டுமே அளிக்க வல்லவை. அனைவருடைய ஜாதகத்திலும், யோகங்கள் கண்டிப்பாக இருக்கும். அவை சரியான தசா புத்தி நடைபெறும் பொழுது, தன்னுடைய பலன்களை வாரி வழங்கும். பல யோகங்கள் இருந்தாலும், ஒரு சில யோகங்களே பெரும்பான்மையானவருக்கு அமைகிறது. அப்படிப்பட்ட யோகங்களை, ஒரு சிலர் வாழ்க்கையில் அனுபவித்து வாழ்க்கையின் உச்சத்தைத் தொடுகின்றனர்.
சிலரின் தசா புத்தி வருவதற்கு முன்பே அவர்களின் வாழ்க்கை முடிந்து, யோகங்களை அனுபவிக்கத் தவறிவிடுகின்றனர். யோகம் என்பதற்கு ஜாதகத்தில் ஒன்று படுதல் என்று பொருள். அதாவது, ஜாதகத்தில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இணைந்து இருப்பதால் யோகங்களை உருவாக்குகின்றன. அதே சமயம், ஒரு சில கிரங்கள் தனித்து இருந்தே, யோகப் பலன்களை அளிக்க வல்லவை. இதனை மகா யோகங்கள் என அழைக்கின்றோம். மொத்தமாக ஐந்து மகா யோகங்கள் உள்ளன. இதனை "பஞ்ச மகா புருஷ யோகம்" என்கிறோம். இந்த ஐந்து யோகங்களையும், ஐந்து கிரகங்கள் வழங்குகின்றன. பத்ர யோகம், மாளவியா யோகம், ஹம்ச யோகம், ஷச யோகம் மற்றும் ருஷக யோகம் ஆகும்.
இது செவ்வாய் கிரகத்தால் ஏற்படுகிறது. செவ்வாய் கிரகமானது, ஜாதகத்தில் உள்ள லக்கனத்தில் இருந்து 1,4,7 மற்றும் 10-ம் இடங்களில் அமைவதால் ஏற்படுகிறது. இந்தக் கட்டங்களில் செவ்வாய் உச்சம் அடைந்திருந்தால், அது ருஷக யோகத்தை வழங்குகிறது. இந்த யோகத்தை உடையவர்கள், இளமையாகவும், அழகாகவும் இருப்பர். ஆன்மீகம் மற்றும் தெய்வ நம்பிக்கை அதிம் இருக்கும். இவர்களுக்கு பெரிய இடத்தின் ஆதரவு இருக்கும்.
பத்தர யோகம்இது கிரகங்களில் இளவரசரான, புத பகவானால் ஏற்படுகிறது. இந்த யோகமானது புதன், மிதுனம் மற்றும் கன்னியில் ஆட்சி, உட்சம் பெற்று அமரும் பொழுது ஏற்படுகிறது. இந்த யோகத்தை உடையவர்கள், அதிக ஆயுளுடன் சிற்றின்பங்கள் அனைத்தும் கிடைக்கப் பெற்று வாழ்வர். இவர்கள் தலைமைப் பொறுப்பில் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
ஹம்ச யோகம்இது குரு பகவானால் ஏற்படும் யோகம் ஆகும். இது ஒருவருடைய ஜாதகத்தில் குருவானது, கடகம், தனுசு மற்றும் மீனத்தில் அமைவதால் ஏற்படுகிறது. இந்த யோகத்துடன் பிறந்தவர்கள், இயற்கையாகவே மிக அமைதியான சுபாவம் உடையவர்கள். அதிபுத்திசாலிகளாகவும், பெருந்தன்மையுடனும் விளங்குவர். இவர்கள் சாதாரண உயரம், அழகிய முகத்துடன் காணப்படுவர். தெய்வ பக்தி மிக்கவர்களாக இருப்பர்.
மாளவிய யோகம்இது சுக்கிர பகவானால் ஏற்படுகின்ற யோகம் ஆகும். இந்த யோகம் ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரனானது, ரிஷபம், துலாம் மற்றும் மீன ராசியில் இருப்பதால் ஏற்படுகிறது. இந்த யோகத்தை உடையவர்கள் சந்தோஷத்தை அனைத்து வழிகளிலும் தேடுவர் மற்றும் அடைவர். அழகியத் தோற்றம் இருக்கும். இவர்கள் இயற்கையிலேயே, நல்ல உடல் மற்றும் மன பலத்துடன் இருப்பர். வாகனங்கள் அமையப் பெறுவர்.
ஷச யோகம்இது சனீஸ்வரனால் ஏற்படுகின்ற யோகம் ஆகும். இது சனிபகவான் ஒருவருடைய ஜாதகத்தில், துலாம், மகரம் மற்றும் கும்பத்தில் ஆட்சி, உச்சம் பெறுவதால் அமைகிறது. இந்த யோகத்தை உடையவர்கள், மிகவும் தைரியமானவர்களாகவும், ஆட்சிப் பொறுப்பிலும் இருப்பர். அடுத்தவருடையப் பொருட்களை, அபகரிக்கவும் ஆசைப்படுவர்.
இவைத் தவிர்த்துப் பல யோகங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த ஐந்து யோகங்களே அதிகப் பலன்களை அளிக்க வல்லவை ஆகும்.