விகாரி வருட ராசிபலன் ரிஷபம் 2019-2020

24 October 2019 ராசிபலன்
rishabam.jpg

ரிஷப ராசியானது ராசிக்கட்டத்தில் இரண்டாவது ராசியாகும். இது ஒரு பெண் ராசி. இது ஒரு நில ராசியும் கூட. இதன் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். இந்த விகாரி தமிழ் புத்தாண்டில், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என மாபெரும் கோள்களின் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த தமிழ் புத்தாண்டு மே 15 வரை குரு பகவான், சனி மற்றும் கேது பகவானுடன் இணைந்து குரு சண்டாள யோகத்தை தனுசு ராசியில் உண்டு பண்ண உள்ளார். இது உங்கள் ராசிக்கு எட்டாம் இடமாகும். மே 15க்குப் பின் மீண்டும், விருச்சிக ராசிக்கே சென்று விடுகிறார். பின்னர், அக்டோபர் மாதம் 28ம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

அங்கு சனி பகவான் மற்றும் கேது பகவானுடன் இணைந்து மீண்டும் குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ண உள்ளார். அதே போன்று, சனி பகவான் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். ஆக மொத்தம், இந்த விகாரி வருடத்தில் கிட்டத்தட்ட இரண்டு மாபெரும் கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன.

சரி, இந்த விகாரி வருடத்தில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்றுப் பார்ப்போம். ஆண்டு தொடக்கத்தில் மூன்று பெரும் கோள்களான, கேது, சனி மற்றும் குரு ஆகியோர் ஒன்றாக இருக்கின்றனர். உங்கள் ராசியிலேயே செவ்வாய் பகவான் இருக்கின்றார். சூரிய பகவான் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் வீட்டில், இருக்கின்றார்.

ஏப்ரல் முதல் மே வரை குரு பகவான், சனி பகவான் மற்றும் கேது பகவான் ஆகியோர் ஒன்றாக, தனுசு ராசியில், ரிஷப ராசிக்கு, எட்டாம் இடத்தில் இருக்கின்றனர். ராகு பகவான், தொடர்ந்து உங்கள் ராசிக்கு, இரண்டாம் இடத்திலேயே, இருக்க உள்ளார். மற்ற கிரகங்கள் அதன் காலத்திற்கு ஏற்றபடி, சுழன்று கொண்டே இருக்க உள்ளன.

தனுசு ராசி ஒரு மூல ராசியாகும். இதனை உபய ராசி என அழைப்பர். இந்த உபய ராசியில் மாபெரும் கிரகங்கள் முதல் மாதம் இருக்கின்றன. இவைகளின் சேர்க்கை, குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ணும். மேலும், குருவின் பார்வையால், முதல் மாதம், ராகுவால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். இந்த குரு சண்டாள யோகம், மீண்டும், தீபாவளிக்குப் பின்பு, ஆரம்பிக்கும்.

ரிஷப ஒரு நில ராசி அதே சமயம் ஒரு ஸ்திர ராசியும் கூட. ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிரகம் கூட ஸ்திர ராசியில் இல்லை. ஆனால், ராஜ கிரகங்களான, சனி, குரு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் நெருப்பு ராசியில் சஞ்சரிக்கின்றன.

இந்த சஞ்சாரம் உங்களுக்கு வலிமையைத் தரும் அமைப்பாகும். இந்த மூவரும் கூடியிருப்பது உங்கள் உடல்நிலையை மட்டுமின்றி, உங்கள் ரகசியமான விஷயங்கள், மற்றும் ரகசிய உறவுகள், ரகசியத் தொழில்கள், ரகசிய வருமானம் ஆகியவற்றைக் குறிக்கின்றது. எனவே, நீங்கள் இந்தக் காலக் கட்டத்தில், உங்கள் ரகசியத்தைக் காப்பற்றிக் கொள்ளுங்கள். இல்லையென்றால், சிக்கல் தான்.

குறிப்பாக, இந்த மே மாதம் சூரிய பகவான் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டில் உள்ளார். அவர் உச்சமடைந்து இருந்தாலும், அவர் இருப்பது ஒரு மறைவு ஸ்தானம் ஆகும். எனவே, சற்றுக் கவனமுடன் இருப்பது அவசியமான ஒன்று. இது தொடர்ந்து மே மாதம் வரை நீடிக்கும். ராகு பகவான், உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில், உபய ராசியில், காற்று ராசியில் இருக்கிறார்.

இதனால், உங்களுக்கு நல்ல வருமானம் உண்டாகும். அது எப்படி வரும் என்பதை உங்கள் ஜாதகத்தைப் பொறுத்தே கூற முடியும். இருப்பினும், உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், கண்டிப்பாக எவ்விதப் பிரச்சனையும் இன்றி, சுமூகமான முறையல் பண வரவு உண்டாகும். இருப்பினும், நீங்கள் கவனமாகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த வெற்றியைக் கொடுப்பவர் ராகு. முதல் மாதம் குருவின் பார்வையப் பெறுவதால், ராகுவால் எவ்விதப் பிரச்சனையும் ஏற்படாது.

ஆனால், முதல் மாதம் முடிந்த பின்பு, அதாவது மே மாதத்திற்குப் பின், ராகு பகவான், மிகவும் பலமடைகின்றார். இதனால், நீங்கள் வருமானம் எந்த வழியில் வருகின்றது, என்பதில் கவனமுடன் இருந்தாலே அனைத்துப் பிரச்சனைகளிலிருந்தும் தப்பித்துவிடலாம்.

சுக்கிரன் ஆண்டு முழுக்க நல்ல நிலைமையிலேயே இருக்கின்றார். இதனால், பெண்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். மே மாதத்திற்குப் பிறகு, குரு பகவான் மீண்டும், ஏழாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். அவர் ஏழாம் இடத்தில் இருப்பதால், திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு நல்லதொரு வரன் அமையும். பெண்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல பல உதவிகளை செய்வார்கள்.

தீபாவளி வரை, குரு பகவான் தொடர்ந்து இதே நிலையில், இருக்க உள்ளார். மேலும், தீபாவளிக்குப் பிறகு வரும் குருப்பெயர்ச்சியின் காரணமாக, குரு பகவான் சர்வ வல்லமையுடன், தன்னுடைய முதல் ஆட்சி வீடான தனுசு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அங்கு கேது மற்றும் சனி பகவானுடன் இணைகின்றார்.

அங்கு அவ்வாறு இணைந்தாலும், தன்னுடைய வீட்டிற்கு செல்வதால், கெடுதல்களை செய்யவிட மாட்டார். மேலும், இந்த சமயத்தில், நீங்கள் ஏதேனும், தவறு செய்தீர்கள் என்றால், கண்டிப்பாக, மாட்டிக் கொள்வீர்கள். எனவே, தேவையற்ற, தகாத, அரசுக்குப் புரம்பான, சட்டத்திற்கு விரோதமான வழிகளில் செல்ல வேண்டாம்.

. குருவின் பார்வையை உங்கள் ராசிக்குப் பன்னிரெண்டாம் இடம் பெறுவதால், நிம்மதியான உறக்கம், சுகமான படுக்கை ஆகியவை உங்களுக்குக் கிடைக்கும். அதே சமயம், நீங்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். வருமானம் சற்று நிதானமான அளவாகவே இருக்கும்.

ராகுவினால், ஏற்படும் பாதிப்புகளும் குறையும். மேலும், 2020ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியினால், சனி பகவான் உங்கள் ராசிக்குப் ஒன்பதாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இது உங்கள் தந்தையின் ஸ்தானம் மட்டுமல்ல, தான தர்மங்களை குறிக்கக் கூடிய இடம் ஆகும். இதன் காரணமாக, நீங்கள் பல புனிதக் காரியங்களில், பாவத்தைத் தொலைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஈடுபடுவீர்கள்.

கோவில்கள் செல்லுதல், பசுமாட்டிற்கு கீரை வாங்கித் தருதல், போன்றவைகளை நீங்கள் செய்வீர்கள். தந்தையின் உடல்நலத்தில் அக்கறைத் தேவை. அவரை சரியான மருத்துவ வசதியை எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கவும். உங்கள் தந்தைக்கு நீங்கள் எந்த அளவிற்கு, உதவியாக இருக்கின்றீர்களோ, அந்த அளவிற்கு சனி பகவான் இந்த சனிப் பெயர்ச்சியில் உங்களுக்கு துணையாக இருப்பார்.

பணவரவு இந்த ஆண்டும், தற்பொழுதுள்ள நிலையே நீடிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி ஆகியவை நன்றாகவே இருக்கும்.

ஆக மொத்தம், இந்த விகாரி ஆண்டு, உங்கள் ரிஷப ராசிக்கு நூற்றுக்கு 95% நன்றாகவே உள்ளது. மேலும், பல நன்மைகள் நடக்க, முதலில் உங்கள் குல தெய்வத்தை வணங்கவும். பின்னர், தெட்சிணாமூர்த்தியையும், சிவபெருமானையும் வணங்கி வர, சனி மற்றும கேதுவால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.