ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

24 October 2019 ராசிபலன்
rishabam.jpg

குரு பகவான் வரும் தீபாவளிக்கு அடுத்த நாள், அதாவது அக்டோபர் 28ம் தேதி அம்மாவாசை அன்று, சுவாதி நட்சத்திர நாளில் இந்தப் பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து, தன்னுடைய முதல் சொந்த வீடான தனுசு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார்.

அனைத்து உயிர்களுக்கும் சகல மங்கலத்தை அருளும் குரு பகவான், இந்த முறை தன்னுடைய சொந்த வீட்டிற்குச் செல்வது மாபெரும் நன்மையாகும். அவ்வாறு செல்லும் குரு பகவான், தன்னுடைய ஐந்தாம் பார்வையாக மேஷத்தையும், ஏழாம் பார்வையாக மிதுனத்தையும், ஒன்பதாம் பார்வையாக சிம்மத்தையும் பார்க்கின்றார்.

தனுசு ராசியில் சனீஸ்வரன் மற்றும் கேது பகவானுடன் இணையும் குரு பகவான், அங்கு குரு சண்டாள யோகத்தினை உருவாக்குகின்றார். அங்கிருந்து கொண்டு, தன்னுடைய ஏழாம் பார்வையாக, ராகு பகவானைப் பார்க்கின்றார். இதன் காரணமாக, ராகு சுபத் தன்மை அடைகின்றார். இதனால், இதுவரை, அனைவருக்குமே, சங்கடத்தையும், கஷ்டங்களையும் வழங்கி வந்த ராகு பகவான், குருப் பெயர்ச்சிக்குப் பின், 50% நன்மைகளை வழங்க ஆரம்பிப்பார்.

ஜனவரி 24ம் தேதி, சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளது. அதற்குப் பின், சனி பகவானும், தன்னுடைய சொந்த வீடான மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அதன் காரணமாக, அவருடையப் பார்வை, ராகுவின் மீதிருந்து விலகிவிடும். அப்பொழுதில் இருந்து 2020ம் ஆண்டு முடியும் வரை, ராகு பகவான் 100% சுபத் தன்மை அடைந்து, தன்னுடைய முழு அதிர்ஷ்டத்தையும், எளிய வழிகளையும், குறுக்கு வழிகளையும் காட்டி, வாழ்வில் பல வளர்ச்சிகளை ஏற்படுத்துவார். இது அடுத்த நடக்க இருக்கும், ராகு-கேது பெயர்ச்சி வரை நீடிக்கும்.

சனி பகவான் ஜனவரி 24ம் தேதி தன்னுடைய முதல் ஆட்சி வீடான, மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். அங்கிருந்து, தன்னுடைய மூன்றாம் பார்வையை மீன ராசியின் மீதும், ஏழாம் பார்வையை கடக ராசியின் மீதும், 10ம் பார்வையை துலாம் ராசியின் மீதும் பதிக்கின்றார். இதனால் ஏற்படும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம்.

சுக்கிர பகவானை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! வசியம் செய்யும் பேச்சாலும், கிரங்கடிக்கும் அழகாலும் எதிர்த்து நிற்பவரைக் கூட, உங்கள் அணியில் சேர்க்கும் சக்தி உடைய நீங்கள், இந்த குருப் பெயர்சிக்குப் பின், என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சிக்குப் பின், தன்னுடைய சொந்த வீடான தனுசு ராசிக்கு குரு பகவான், பெயர்ச்சி அடைகிறார். அது உங்கள் ராசிக்கு எட்டாம் இடமாகும். முதலில் நாம் இந்தக் குருப்பெயர்ச்சியை, இரண்டு கட்டங்களாகப் பிரித்துப் பார்ப்போம். முதலில், அக்டோபர் 28 முதல் ஜனவரி 24 வரை. மற்றொன்று ஜனவரி 24க்கு பின்.

இவை இரண்டிற்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு. இவை இரண்டுமே, மாபெரும் மாற்றத்தை உங்கள் வாழ்க்கையுல் உண்டாக்கும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை.

அக்டோபர் 28 முதல் ஜனவரி 24 வரை

இந்தக் காலக் கட்டத்தில், குரு பகவான், தன்னுடைய தனுசு ராசியில் நுழைகின்றார். அங்கு கேது மற்றும் சனி பகவானுடன் இணைந்து குரு சண்டாள யோகத்தினை உண்டு பண்ண உள்ளார். அவர் அங்கிருந்து, மேஷம், மிதுனம் மற்றும் சிம்மம் ஆகிய வீடுகளைப் பார்ப்பார்.

சனி மற்றும் குரு பகவான் ஆகியோர், இணைந்து இருப்பது பெரிய அளவில் ஆன்மீக ஈடுபாட்டினை அதிகரிக்கும். முதலில் நீங்கள் கடந்த மார்ச் முதல் மே 15 வரை என்னென்ன நடந்தது, நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அவைகள் பெரும்பாலும், மீண்டும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் எதனையும் ஆரம்பிக்கக் கூடாது. காரணம், நீங்கள் இந்தக் காலக் கட்டத்தில், எதையாவது ஆரம்பித்தால், அது பெரிய அளவில் வளர்ச்சி பெறும். நீங்களும், மேலும், அதில் முதலீடு செய்வீர்கள். அதுவும் பெரிய அளவில் வளரும் பொழுது, உங்களுடைய மனநிலையின் காரணமாக, நீங்கள் அதனைக் கைவிடும் நிலைமை உண்டாகும்.

இதன் காரணமாகவே, இந்தக் காலக் கட்டத்தில் யாரும், எதையும் ஆரம்பிக்கக் கூடாது. மேலும், இந்தக் காலக் கட்டத்தில் அதிர்ஷ்டம் என்பது 50% மட்டுமே வேலை செய்யும். மீதி 50% வாய்ப்புகள் சனிபகவான் உழைப்பாக மாற்றிவிடுவார். உழைத்த உழைப்புக்கேற்றப் பலன்களைப் பெற வேண்டும் என்றால், இறையருள் வேண்டும். மேலும், சனி, கேதுவுடன் இணைந்திருக்கும் குரு, ராகுவின் பார்வையையும் பெறுவதால், இந்தக் காலக் கட்டத்தில் அனைவருமே, கோவிலுக்குச் சென்று புண்ணியங்களை செய்வது நல்லது.

தனுசில் இருக்கும் சனி பகவான், உங்களை குல தெய்வக் கோவில்கள், ஆன்மீக யாத்திரைகள், முருகன் கோவில்கள், சித்தர் வழிபாடுகளை செய்ய வைப்பார். சனி பகவானின் பார்வையால், வருமானத்தின் அளவு குறைவாகவே இருக்கும். சகோதரருடன் பிரச்சனைகள் தொடரலாம். வீட்டில் மனைவியிடம் அந்த விஷயத்தில் ஈடுகொடுக்க முடியாமல் திணறலாம். மனைவியுடன் வீண் வாக்குவாதங்களும் நிகழலாம்.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். இதன் காரணமாக, வீட்டில் உள்ள பொருட்கள் திருடு போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, சற்று கவனமுடன் எதையும் பார்த்துக் கொள்ளவும். ரிஷப ராசிக்கு எட்டாம் இடத்தில், சனி பகவான், கேது பகவான் இவர்களுடன் குரு பகவான் இணைகின்றார். இதன் காரணமாக, ஆயுள் பலம் கூடும்.

இருப்பினும், இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும். அதே சமயம், தேவையில்லாதக் கடன்களைத் தவிர்க்கவும். பண விஷயங்களில் அதிக எச்சரிக்கைத் தேவை. இரும்புப் பொருட்களைக் கையாளும் பொழுதோ அல்லது கூர்மையானப் பொருட்களைக் கையாளும் பொழுதோ, எச்சரிக்கைத் தேவை.

குரு பகவானின் பார்வையால், ராகு பகவான் பெரிய அளவிலானப் பிரச்சனைகளைத் தரமாட்டார். இதுவரை இருந்து வந்த பணமுடக்கத்திற்கு விடிவு காலம் பிறக்கும். மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள, குழப்பமடைந்துள்ள நீங்கள், இனி தப்பிக்க ஆரம்பிப்பீர்கள்.

கேது பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில், குரு மற்றும் சனியுடன் இணைந்து இருக்க உள்ளார். இதன் காரணமாக, உங்கள் மனைவி அல்லது கணவனுடன் சிறிய அளவில் பிரச்சனைகள் ஏற்படலாம். கவலை வேண்டாம். குரு அருகில் இருப்பதால், அது செல்ல சண்டையாகவே இருக்கும்.

குரு பகவானின் பார்வையின் காரணமாக, நல்ல உறக்கம், சுபச் செலவுகள், தெய்வீக வழிபாடு, குடும்பத்தில் நல்ல நிம்மதி, அமைதி, நல்ல வருமானம் ஆகியவை உண்டாகும். உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். தாயின் உடல்நிலை சீராகும். ஒரு சிலருக்கு புதிய வீடுகள், வாகனங்கள் வாங்கும் பாக்கியமும் உண்டாகும்.

சனி பகவான் குரு பகவானுடன் இணைந்து இருப்பதால், சுபத் தன்மை அடைகின்றார். மேலும், அவருடைய பார்வையின் காரணமாக, தொழிலிருந்து வருமானத்தின் அளவு, செலவாகும் வாய்ப்புகள் உள்ளன. முகத்தில் ஒருவித இறுக்கம் தெரியும். பேசும் பொழுது பொறுமையைக் கடைபிடிக்கவும். குழந்தைகளுடன் விட்டுக் கொடுத்துச் செல்லவும். உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் இருந்து, படாதபாடு படுத்தி எடுத்த சனிபகவான். இந்த ஜனவரி 24 அன்று தனுசு ராசியில் இருந்து, தன்னுடைய சொந்த வீடான மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். இதனால், இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த மறைமுகமானக் கஷ்டங்கள் ஒரு முடிவிற்கு வரும். குழந்தைகளும் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பர்.

ஜனவரி 24க்குப் பின்

ஜனவரி 24 அன்று, சனி பகவான் தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். உங்கள் ராசிக்கு, ஒன்பது மற்றும் பத்தாம் இடத்திற்கு அதிபதியான சனி பகவான், ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைவதைப் பற்றி இனியும் சொல்ல வேண்டுமா என்ன? 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டின் மத்தியப் பகுதி வரை, இந்த மகர ராசியில் இருக்க உள்ளார். அங்கிருந்து மீனம், கடகம் மற்றும் துலாம் ராசிகளைப் பார்க்கின்றார்.

தொழில்காரகனான சனிபகவான், உங்களுக்கு இந்த முறை சிறப்பான அமைப்பில், ஷச மகா யோகத்தினை வழங்கும் நிலையில் பெயர்ச்சி அடைகின்றார். இதன் காரணமாக, தொழிலில் ஏற்படும் தடைகள் அகலும். தந்தையுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கி, நிம்மதி பிறக்கும். தெய்வத்தின் கடாட்சம் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் தொடர்ந்து, கோவில்கள் மற்றும் புனித ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வருமானத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். பெரிய நட்பு வட்டம், அதாவது மேல் தட்டு நட்பு வட்டாரத்தில், ஒரு சிலருக்கு அவமானம் உண்டாகலாம். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மூத்த சகோதரருடன் பிரச்சனைகள் உண்டாகலாம்.

இளைய சகோதரருடன் கருத்து வேறுபாடு, பணப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வீரம் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உடலில் சக்தியும் குறையும். எதிரிகளை எளிதாக இம்முறை வென்றுவிடுவீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். நீங்கள் ஏதேனும், நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கும் தீர்வு கிடைக்கும்.

தனுசு ராசியில் இருக்கும் குரு பகவான், ராகு பகவானைப் பார்த்து தொடர்ந்து, குரு சண்டாள யோகத்தை உண்டாக்கி கொண்டே இருக்க உள்ளார். இதன் காரணமாக, அதிர்ஷ்டம் தேடி வரும். ராகு பகவான் உங்களுக்கு நன்மைகளை செய்யக் கூடியவர் என்பதனை மறக்க வேண்டாம். அவர் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். இதனால், குடும்பத்தினரின் மூலம் அதிர்ஷ்டங்கள் உண்டாகலாம். குறுக்கு வழிகளில், எப்படி பணம் சேர்ப்பது எனத் தெரிந்து கொள்வீர்கள். குழந்தைப் பிறப்பு தாமதம் ஆகும் வாய்ப்புகளும் உள்ளன. தொடர்ந்து, பெண் தெய்வங்களை வணங்கி வரவும்.

ஜனவரி 24 வரை, குறைந்த பலத்துடன் இருந்து வந்த ராகு, ஜனவரி 24க்குப் பின், முழு சுப பலத்துடன், உங்களுக்கு பல நன்மைகளை வழங்குவார். அதவும் குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் இருந்து, மிக அதிக அளவில் நனமைகளை வழங்கி, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்து விடுவார்.

குரு, கேது பகவானுடன் இணைந்து இருப்பதால், நீங்கள் ஆன்மீகப் பயணங்களையும், குல தெய்வ வழிபாட்டினையும் தொடரும் வாய்ப்புகள் உண்டாகும். மனதில், தொடர்ந்து தெய்வத்தை வைத்து இருக்கவும். தீர்த்த யாத்திரைகள், மலைகளில் இருக்கும் கோவில்கள் ஆகியவைகளுக்குச் சென்று வரும் வாய்ப்புகள் பிரமாதமாக உள்ளன.

குரு பகவான் தொடர்ந்து தன்னுடைய ஐந்தாம் பார்வையாக, மேஷ ராசியைப் பார்த்துக் கொண்டு இருக்க உள்ளார். இதனால், தூக்கத்தின் பொழுது ஏற்பட்டு வந்த பிரச்சனைகள் தீரும். ஒரு சிலர், நன்றாக தூங்கும் பொழுது சட்டென்று எழுந்து நீர் அருந்துவர். பின்னர் கழிவறை சென்று கொண்டு இருப்பர். இந்த வகைப் பிரச்சனைகள் அனைத்தும், இந்தக் குருப்பெயர்ச்சிக்குப் பின், மாறும். குடும்பத்தில் ராகுவால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும், குருவின் பார்வையால், நன்மையில் முடியும் என்பதை மறக்க வேண்டாம். தொடர்ந்து தாயின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடையும்.

ஆக மொத்தம் இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் ரிஷப ராசிக்கு, நூற்றுக்கு 91% நன்மைகள் மட்டுமே நடக்கும். மேலும், பல நன்மைகள் நடக்க, தெட்சிணாமூர்த்தி, கணபதி, சித்தர்கள், சிவ பெருமான், பெண் தெய்வங்கள் ஆகியோரில், உங்களுக்கு விருப்பமானவரைத் தொடர்ந்து வணங்கவும். மறக்காமல், குல தெய்வ வழிப்பாட்டினை மேற்கொள்வது நல்லது.