மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

24 October 2019 ராசிபலன்
mesham.jpg

குரு பகவான் வரும் தீபாவளிக்கு அடுத்த நாள், அதாவது அக்டோபர் 28ம் தேதி அம்மாவாசை அன்று, சுவாதி நட்சத்திர நாளில் இந்தப் பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து, தன்னுடைய முதல் சொந்த வீடான தனுசு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார்.

அனைத்து உயிர்களுக்கும் சகல மங்கலத்தை அருளும் குரு பகவான், இந்த முறை தன்னுடைய சொந்த வீட்டிற்குச் செல்வது மாபெரும் நன்மையாகும். அவ்வாறு செல்லும் குரு பகவான், தன்னுடைய ஐந்தாம் பார்வையாக மேஷத்தையும், ஏழாம் பார்வையாக மிதுனத்தையும், ஒன்பதாம் பார்வையாக சிம்மத்தையும் பார்க்கின்றார்.

தனுசு ராசியில் சனீஸ்வரன் மற்றும் கேது பகவானுடன் இணையும் குரு பகவான், அங்கு குரு சண்டாள யோகத்தினை உருவாக்குகின்றார். அங்கிருந்து கொண்டு, தன்னுடைய ஏழாம் பார்வையாக, ராகு பகவானைப் பார்க்கின்றார். இதன் காரணமாக, ராகு சுபத் தன்மை அடைகின்றார். இதனால், இதுவரை, அனைவருக்குமே, சங்கடத்தையும், கஷ்டங்களையும் வழங்கி வந்த ராகு பகவான், குருப் பெயர்ச்சிக்குப் பின், 50% நன்மைகளை வழங்க ஆரம்பிப்பார்.

ஜனவரி 24ம் தேதி, சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளது. அதற்குப் பின், சனி பகவானும், தன்னுடைய சொந்த வீடான மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அதன் காரணமாக, அவருடையப் பார்வை, ராகுவின் மீதிருந்து விலகிவிடும். அப்பொழுதில் இருந்து 2020ம் ஆண்டு முடியும் வரை, ராகு பகவான் 100% சுபத் தன்மை அடைந்து, தன்னுடைய முழு அதிர்ஷ்டத்தையும், எளிய வழிகளையும், குறுக்கு வழிகளையும் காட்டி, வாழ்வில் பல வளர்ச்சிகளை ஏற்படுத்துவார். இது அடுத்த நடக்க இருக்கும், ராகு-கேது பெயர்ச்சி வரை நீடிக்கும்.

சனி பகவான் ஜனவரி 24ம் தேதி தன்னுடைய முதல் ஆட்சி வீடான, மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். அங்கிருந்து, தன்னுடைய மூன்றாம் பார்வையை மீன ராசியின் மீதும், ஏழாம் பார்வையை கடக ராசியின் மீதும், 10ம் பார்வையை துலாம் ராசியின் மீதும் பதிக்கின்றார். இதனால் ஏற்படும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம்.

செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட, மேஷ ராசி அன்பர்களே! வீரமும், வேகமும் உடைய நீங்கள் வெற்றியை மட்டுமே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டவர்கள். தான் ஈடுபடும் செயல்களில், போட்டிகளை வெல்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, எதிரிகளை தோற்கடிப்பதில் நீங்கள் கெட்டிக்காரர்கள். உங்களுடைய ராசிக்கு குரு பகவான் ஒன்பதாம் இடத்திற்கும், 12ம் இடத்திற்கும் அதிபதி ஆவார்.

அவர், அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சிக்குப் பின், தன்னுடைய சொந்த வீடான தனுசு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அது உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமாகும். முதலில் நாம் இந்தக் குருப்பெயர்ச்சியை, இரண்டு கட்டங்களாகப் பிரித்துப் பார்ப்போம். முதலில், அக்டோபர் 28 முதல் ஜனவரி 24 வரை. மற்றொன்று ஜனவரி 24க்கு பின்.

இவை இரண்டிற்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு. இவை இரண்டுமே, மாபெரும் மாற்றத்தை உங்கள் வாழ்க்கையுல் உண்டாக்கும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை.

அக்டோபர் 28 முதல் ஜனவரி 24 வரை

இந்தக் காலக் கட்டத்தில், குரு பகவான், தன்னுடைய தனுசு ராசியில் நுழைகின்றார். அங்கு கேது மற்றும் சனி பகவானுடன் இணைந்து குரு சண்டாள யோகத்தினை உண்டு பண்ண உள்ளார். அவர் அங்கிருந்து, மேஷம், மிதுனம் மற்றும் சிம்மம் ஆகிய வீடுகளைப் பார்ப்பார்.

சனி மற்றும் குரு பகவான் ஆகியோர் இணைந்து இருப்பது பெரிய அளவில் ஆன்மீக ஈடுபாட்டினை அதிகரிக்கும். முதலில் நீங்கள் கடந்த மார்ச் முதல் மே 15 வரை என்னென்ன நடந்தது, நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அவைகள் பெரும்பாலும், மீண்டும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் எதனையும் ஆரம்பிக்கக் கூடாது. காரணம், நீங்கள் இந்தக் காலக் கட்டத்தில், எதையாவது ஆரம்பித்தால், அது பெரிய அளவில் வளர்ச்சி பெறும். நீங்களும், மேலும், அதில் முதலீடு செய்வீர்கள். அதுவும் பெரிய அளவில் வளரும் பொழுது, உங்களுடைய மனநிலையின் காரணமாக, நீங்கள் அதனைக் கைவிடும் நிலைமை உண்டாகும்.

இதன் காரணமாகவே, இந்தக் காலக் கட்டத்தில் யாரும், எதையும் ஆரம்பிக்கக் கூடாது. மேலும், இந்தக் காலக் கட்டத்தில் அதிர்ஷ்டம் என்பது 50% மட்டுமே வேலை செய்யும். மீதி 50% வாய்ப்புகள் சனிபகவான் உழைப்பாக மாற்றிவிடுவார். உழைத்த உழைப்புக்கேற்றப் பலன்களைப் பெற வேண்டும் என்றால், இறையருள் வேண்டும். மேலும், சனி, கேதுவுடன் இணைந்திருக்கும் குரு, ராகுவின் பார்வையையும் பெறுவதால், இந்தக் காலக் கட்டத்தில் அனைவருமே, கோவிலுக்குச் சென்று புண்ணியங்களை செய்வது நல்லது.

தனுசில் இருக்கும் சனி பகவான், உங்களை குல தெய்வக் கோவில்கள், ஆன்மீக யாத்திரைகள், முருகன் கோவில்கள், சித்தர் வழிபாடுகளை செய்ய வைப்பார். சனி பகவானின் பார்வையால், வருமானத்தின் அளவு குறைவாகவே இருக்கும். சகோதரருடன் பிரச்சனைகள் தொடரலாம். வீட்டில் மனைவியிடம் அந்த விஷயத்தில் ஈடுகொடுக்க முடியாமல் திணறலாம். மனைவியுடன் வீண் வாக்குவாதங்களும் நிகழலாம்.

ராகு பகவான், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருக்கின்றார். இதன் காரணமாக, உங்கள் இளைய சகோதரர் தேவையில்லாமல் உங்களுடன் வீண் வாக்குவாதம் செய்தல், கைகலப்பு, சண்டை உட்பட பல, மனதைக் கஷ்டப்படுத்தும் விஷயங்களை செய்திருப்பார். தற்பொழுது அது குறையும். ஒரு சிலருக்கு நண்பர்கள் உதவி செய்வர்.

கேது பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில், குரு மற்றும் சனியுடன் இணைந்து இருக்க உள்ளார். இதன் காரணமாக, உங்கள் மாமனார் அல்லது மாமியார் உடல் நலத்தில் அக்கறைத் தேவை.

ஒன்பதாம் இடத்தில் இருக்கும் குரு பகவான், தந்தையின் ஆசிர்வாதத்தை முழுமையாகக் தருவார். தந்தை வழி உறவினர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும் முயற்சிகளையும், வழிகளையும் உங்களுக்கு குரு பகவான் காட்டுவார். உங்கள் உடல்நலத்தில், ஆராக்கியம் அதிகரிக்கும். வேலைத் தேடுபவர்களுக்கு நல்ல வேலைக் கிடைக்கும். அரசாங்க உத்யோகத்தினைத் தேடுபவர்கள், சற்று, ஜனவரி வரைக் காத்திருங்கள் பின்னர் எல்லாம் சுபம் தான். குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, நல்ல அழகிய குழந்தைப் பாக்கியம் உண்டாகும்.

ஜனவரி 24க்குப் பின்

ஜனவரி 24 அன்று, சனி பகவான் தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்திற்கு அதிபதியான சனி பகவான், அங்கு பெயர்ச்சி அடைவதைப் பற்றி இனியும் சொல்ல வேண்டுமா என்ன? 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டின் மத்தியப் பகுதி வரை, இந்த மகர ராசியில் இருக்க உள்ளார். அங்கிருந்து மீனம், கடகம் மற்றும் துலாம் ராசிகளைப் பார்க்கின்றார்.

தொழில்காரகனான சனிபகவான், உங்களுக்கு இந்த முறை சிறப்பான அமைப்பில், ஷச மகா யோகத்தினை வழங்கும் நிலையில் பெயர்ச்சி அடைகின்றார். இதன் காரணமாக, தொழிலில் ஏற்படும் தடைகள் அகலும். தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்தக் காலக் கட்டம் சிறப்பான ஒன்றாகும். சிவபெருமானை வணங்கித் தொழிலைத் தொடங்குங்கள். எல்லாம் வசமாகும். வேலைத் தேடியவர்களுக்கு. நல்ல வேலை கிடைக்கும். அரசாங்க வேலைக்காக காத்திருந்த மேஷ ராசி அன்பர்களுக்கு, நல்ல சம்பளத்தில் அரசாங்க வேலைக் கிடைக்கும். தொழிலில் வருமானம் நன்றாக இருக்கும்.

தூங்கும் பொழுது, இரவில் ஒரு சிலரால், இறைவனைக் காண இயலும். தூங்கும் இடத்தில், குப்பைகள் கிடக்கலாம். தலை முடி, கிழிந்த பேப்பர்கள், கசங்கிய துணிகள், பழைய அழுக்குத் துணிகள் உங்கள் பெட்டில் கிடக்கலாம். தாயின் உடல்நலத்தில் அக்கறைத் தேவை.

மாமியாருடன் பேசும் பொழுது, விட்டுக் கொடுத்துச் செல்லவும். மேலும், அவர்களுடன் மனக் கசப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உங்கள் எதிரிகளை எளிதாக வென்றுவிடுவீர்கள். உடலில் ஏற்பட்டுள்ள நோய்கள் நீங்கி, சிறப்பான உடல்நிலை உண்டாகும். கடன் பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரு முடிவு வரும்.

தனுசு ராசியில் இருக்கும் குரு பகவான், ராகு பகவானைப் பார்த்து தொடர்ந்து, குரு சண்டாள யோகத்தை உண்டாக்கி கொண்டே இருக்க உள்ளார். இதன் காரணமாக, அதிர்ஷ்டம் தேடி வரும். கட்டில், மனைவியை சமாளிக்க முடியாமல் இருந்து வந்த நீங்கள், இந்த முறை வலிமையாக செயல்படுவீர்கள். குருவின் பார்வையால், வாழ்க்கையில் வசந்தகாலம் வந்ததாக நீங்களே உணர்வீர்கள். மனதில் நிம்மதி பிறக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்களும், கஷ்டங்களும் மறையும். குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, அழகிய ஆண் குழந்தைகள் பிறக்கும்.

ஜனவரி 24 வரை, குறைந்த பலத்துடன் இருந்து வந்த ராகு, ஜனவரி 24க்குப் பின், முழு சுப பலத்துடன், உங்களுக்கு பல நன்மைகளை வழங்குவார். அதவும் குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் இருந்து, மிக அதிக அளவில் நனமைகளை வழங்கி, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துவிடுவார்.

குரு கேது பகவானுடன் இணைந்து இருப்பதால், நீங்கள் ஆன்மீகப் பயணங்களையும், குல தெய்வ வழிபாட்டினையும் தொடரும் வாய்ப்புகள் உண்டாகும். மனதில், தொடர்ந்து தெய்வத்தை வைத்து இருக்கவும். தீர்த்த யாத்திரைகள், மலைகளில் இருக்கும் கோவில்கள் ஆகியவைகளுக்குச் சென்று வரும் வாய்ப்புகள் பிரமாதமாக உள்ளன.

ஆக மொத்தம் இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் மேஷ ராசிக்கு, நூற்றுக்கு 95% நன்மைகள் மட்டுமே நடக்கும். மேலும், பல நன்மைகள் நடக்க, தெட்சிணாமூர்த்தி, கணபதி, சித்தர்கள், ஹயக்ரீவர், குரு பகவான் மற்றும் பிரம்மா ஆகியோரில், உங்களுக்கு விருப்பமானவரைத் தொடர்ந்து வணங்கவும். மறக்காமல், குல தெய்வ வழிப்பாட்டினை மேற்கொள்வது நல்லது.