கடகம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

24 October 2019 ராசிபலன்
Kadagam.jpg

குரு பகவான் வரும் தீபாவளிக்கு அடுத்த நாள், அதாவது அக்டோபர் 28ம் தேதி அம்மாவாசை அன்று, சுவாதி நட்சத்திர நாளில் இந்தப் பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து, தன்னுடைய முதல் சொந்த வீடான தனுசு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார்.

அனைத்து உயிர்களுக்கும் சகல மங்கலத்தை அருளும் குரு பகவான், இந்த முறை தன்னுடைய சொந்த வீட்டிற்குச் செல்வது மாபெரும் நன்மையாகும். அவ்வாறு செல்லும் குரு பகவான், தன்னுடைய ஐந்தாம் பார்வையாக மேஷத்தையும், ஏழாம் பார்வையாக மிதுனத்தையும், ஒன்பதாம் பார்வையாக சிம்மத்தையும் பார்க்கின்றார்.

தனுசு ராசியில் சனீஸ்வரன் மற்றும் கேது பகவானுடன் இணையும் குரு பகவான், அங்கு குரு சண்டாள யோகத்தினை உருவாக்குகின்றார். அங்கிருந்து கொண்டு, தன்னுடைய ஏழாம் பார்வையாக, ராகு பகவானைப் பார்க்கின்றார். இதன் காரணமாக, ராகு சுபத் தன்மை அடைகின்றார். இதனால், இதுவரை, அனைவருக்குமே, சங்கடத்தையும், கஷ்டங்களையும் வழங்கி வந்த ராகு பகவான், குருப் பெயர்ச்சிக்குப் பின், 50% நன்மைகளை வழங்க ஆரம்பிப்பார்.

ஜனவரி 24ம் தேதி, சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளது. அதற்குப் பின், சனி பகவானும், தன்னுடைய சொந்த வீடான மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அதன் காரணமாக, அவருடையப் பார்வை, ராகுவின் மீதிருந்து விலகிவிடும். அப்பொழுதில் இருந்து 2020ம் ஆண்டு முடியும் வரை, ராகு பகவான் 100% சுபத் தன்மை அடைந்து, தன்னுடைய முழு அதிர்ஷ்டத்தையும், எளிய வழிகளையும், குறுக்கு வழிகளையும் காட்டி, வாழ்வில் பல வளர்ச்சிகளை ஏற்படுத்துவார். இது அடுத்த நடக்க இருக்கும், ராகு-கேது பெயர்ச்சி வரை நீடிக்கும்.

சனி பகவான் ஜனவரி 24ம் தேதி தன்னுடைய முதல் ஆட்சி வீடான, மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். அங்கிருந்து, தன்னுடைய மூன்றாம் பார்வையை மீன ராசியின் மீதும், ஏழாம் பார்வையை கடக ராசியின் மீதும், 10ம் பார்வையை துலாம் ராசியின் மீதும் பதிக்கின்றார். இதனால் ஏற்படும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம்.

சந்திர பகவானை அதிபதியாகக் கொண்ட, கடக ராசி அன்பர்களே! மிடுக்கான அழகாலும், கணிவான பேச்சாலும் அடுத்தவர் மனதைக் கவரும் உங்கள் ராசிக்கு இந்த குருப் பெயர்சிக்குப் பின், என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சிக்குப் பின், தன்னுடைய சொந்த வீடான தனுசு ராசிக்கு குரு பகவான், பெயர்ச்சி அடைகிறார். அது உங்கள் ராசிக்கு ஆறாம் இடமாகும். முதலில் நாம் இந்தக் குருப் பெயர்ச்சியை, இரண்டு கட்டங்களாகப் பிரித்துப் பார்ப்போம். முதலில், அக்டோபர் 28 முதல் ஜனவரி 24 வரை. மற்றொன்று ஜனவரி 24க்கு பின்.

இவை இரண்டிற்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு. இவை இரண்டுமே, மாபெரும் மாற்றத்தை உங்கள் வாழ்க்கையுல் உண்டாக்கும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை.

அக்டோபர் 28 முதல் ஜனவரி 24 வரை

இந்தக் காலக் கட்டத்தில், குரு பகவான், தன்னுடைய தனுசு ராசியில் நுழைகின்றார். அங்கு கேது மற்றும் சனி பகவானுடன் இணைந்து, குரு சண்டாள யோகத்தினை உண்டு பண்ண உள்ளார். அவர் அங்கிருந்து, மேஷம், மிதுனம் மற்றும் சிம்மம் ஆகிய வீடுகளைப் பார்ப்பார்.

சனி மற்றும் குரு பகவான் ஆகியோர் இணைந்து இருப்பது, பெரிய அளவில் ஆன்மீக ஈடுபாட்டினை அதிகரிக்கும். முதலில் நீங்கள் கடந்த மார்ச் முதல் மே 15 வரை என்னென்ன நடந்தது, நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்பதை, ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அவைகள் பெரும்பாலும், மீண்டும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தக் காலக் கட்டத்தில், நீங்கள் எதனையும் ஆரம்பிக்கக் கூடாது. காரணம், நீங்கள் இந்தக் காலக் கட்டத்தில், எதையாவது ஆரம்பித்தால், அது பெரிய அளவில் வளர்ச்சி பெறும். நீங்களும், மேலும், அதில் முதலீடு செய்வீர்கள். அதுவும் பெரிய அளவில் வளரும் பொழுது, உங்களுடைய மனநிலையின் காரணமாக, நீங்கள் அதனைக் கைவிடும் நிலைமை உண்டாகும்.

இதன் காரணமாகவே, இந்தக் காலக் கட்டத்தில் யாரும், எதையும் ஆரம்பிக்கக் கூடாது. மேலும், இந்தக் காலக் கட்டத்தில் அதிர்ஷ்டம் என்பது 50% மட்டுமே வேலை செய்யும். மீதி 50% அதிர்ஷ்ட வாய்ப்புகளை, சனிபகவான் உழைப்பாக மாற்றி விடுவார். உழைத்த உழைப்புக்கேற்றப் பலன்களைப் பெற வேண்டும் என்றால், இறையருள் வேண்டும். மேலும், சனி, கேதுவுடன் இணைந்திருக்கும் குரு, ராகுவின் பார்வையையும் பெறுவதால், இந்தக் காலக் கட்டத்தில் அனைவருமே, கோவிலுக்குச் சென்று புண்ணியங்களை செய்வது நல்லது.

தனுசில் இருக்கும் சனி பகவான், உங்களை குல தெய்வக் கோவில்கள், ஆன்மீக யாத்திரைகள், முருகன் கோவில்கள், சித்தர் வழிபாடுகளை செய்ய வைப்பார். சனி பகவானின் பார்வையால், வருமானத்தின் அளவு குறைவாகவே இருக்கும். சகோதரருடன் பிரச்சனைகள் தொடரலாம். வீட்டில் மனைவியிடம் அந்த விஷயத்தில் ஈடுகொடுக்க முடியாமல் திணறலாம். மனைவியுடன் வீண் வாக்குவாதங்களும் நிகழலாம்.

ராகு பகவான், உங்கள் ராசிக்கு 12ல் இருக்கின்றார். இதன் காரணமாக, நீங்கள் உங்களுடைய நிம்மதியான உறக்கத்தை இழந்து, பல நாட்கள் ஆகி இருக்கும். வெளிநாடு செல்ல முயற்சிகள் செய்தும், போக முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கும். குடும்பத்தில், உங்கள் மூலம் பிரச்சனைகள் ஏற்ப்பட்டு இருக்கலாம். தேவையில்லாத தர்ம சங்கடங்கள் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கலாம். தொழிலில் அலைச்சல்கள் ஏற்பட்டு இருக்கும். தொழிலில் அதிக லாபம் இருந்திருக்காது. இவை அனைத்தும், இனி இருக்காது.

கேது பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில், குரு மற்றும் சனியுடன் இணைந்து இருக்க உள்ளார். இதன் காரணமாக, ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இதுவரை கோவிலுக்குச் செல்லாதவர்கள் கூட, இந்த குருப் பெயர்ச்சிக்குப் பின், கோவிலுக்குச் செல்ல ஆரம்பிப்பீர்கள். பொதுவாக கேது பகவான், ஆறில் இருப்பது நல்லது தான். அவர் அங்கு இருப்பதன் மூலம், எதிரிகளை உண்டு இல்லை என ஆக்கிவிடுவார். அதிக அளவிலான, அனுபவ ஞானத்தினை, சனி பகவானுடன் இணைந்து தருவார். இந்த குருப் பெயர்ச்சியின் காரணமாக, சனி மற்றும் கேதுவால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனை, கடன் தொல்லை ஆகியவை நீங்கும். மேலும், சனியின் பார்வைக் காரணமாக, வருமானம் குடும்பத்திற்கேப் பத்தாது என்ற நிலை, இருந்து கொண்டு தான் இருக்கும்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு, ஆறாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகின்றார். இதன் காரணமாக, அவர் நேராக, உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தையும், 12ம் இடத்தையும், 2ம் இடத்தையும் பார்க்க உள்ளார். இந்தப் பார்வைகள், உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ளத் தடைகளை நீக்கும். முதலில், வேலைத் தேடி அலைந்தவர்களுக்கு நல்லதொரு தொழில் அமைந்து, வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். செலவுகள் ஏற்பட்டாலும், அது சுபச் செலவாகவே இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்தப் பிரச்சனைகள் தீரும். உங்கள் மீதிருந்த சுமைகளும் குறைய ஆரம்பிக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.

குரு பகவான், சனி மற்றும் கேதுவுடன் இணைந்து இருக்கின்றார். குரு தன்னுடைய சொந்த வீட்டில் இருந்தாலும், இரண்டு இருள் கிரகங்களுடன் சேர்ந்து இருக்கின்றார். இதன் காரணமாக, தன்னுடைய பலத்தை அவர்களுக்கு வழங்கி, அவர்கள் மூலம் ஏற்பட்ட கஷ்டங்களைத் தீர்ப்பார். உடல்நலம் நன்றாகவே இருக்கும். கடன்களை அடைக்க வழிகள் உண்டாகும். எதிரிகளை வீழ்த்துவதற்கு இறை வழிபாடு மேற்கொள்ள வேண்டி வரலாம்.

சனி பகவான் குரு பகவானுடன் இணைந்து இருப்பதால், திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். குரு பகவான், ராகு பகவானைப் பார்ப்பதனால், குரு சண்டாள யோகத்தினை உண்டாக்குகின்றார். சனி பகவான் தொடர்ந்து, கடன் பிரச்சனைகளின் மூலம் ஏற்படும் கஷ்டத்தை உங்களுக்கு உணர்த்தியிருப்பார்.

இந்த ஜனவரி 24 அன்று தனுசு ராசியில் இருந்து, தன்னுடைய சொந்த வீடான மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். இதனால், இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த மறைமுகமானக் கஷ்டங்கள் ஒரு முடிவிற்கு வரும்.

ஜனவரி 24க்குப் பின்

ஜனவரி 24 அன்று, சனி பகவான் தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். உங்கள் ராசிக்கு, ஏழு மற்றும் எட்டாம் இடத்திற்கு அதிபதியான சனி பகவான், ஏழாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைவதைப் பற்றி இனியும் சொல்ல வேண்டுமா என்ன? மகரத்தில் இருந்து மீனம், கடகம் மற்றும் துலாம் ராசிகளைப் பார்க்கின்றார்.

இதன் காரணமாக, இதுவரை நடக்காமல் இருந்து வந்த திருமணம் நடைபெறும் வாய்ப்புகள் கிடைக்கும். வெளியுலகத் தொடர்புகளும், சிறப்பாக இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது, எச்சரிக்கைத் தேவை. உங்களுடைய நண்பர்கள் உங்களை ஏமாற்ற வாய்ப்புகள் உள்ளன.

தனுசு ராசியில் இருக்கும் குரு பகவான், ராகு பகவானைப் பார்த்து தொடர்ந்து, குரு சண்டாள யோகத்தை உண்டாக்கி கொண்டே இருக்க உள்ளார். இதன் காரணமாக, அதிர்ஷ்டம் தேடி வரும். அவர் உங்கள் ராசிக்கு 12ல் இருக்கின்றார். இதனால், அவர் இதுவரை கொடுத்து வந்த தொந்தரவுகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும். மேலும், ராகு பகவான் வெளிநாடு செல்லும் யோகத்தினையும் கொடுப்பார்.

ஜனவரி 24 வரை, குறைந்த பலத்துடன் இருந்து வந்த ராகு, ஜனவரி 24க்குப் பின், முழு சுப பலத்துடன், உங்களுக்கு பல நன்மைகளை வழங்குவார். அதவும் குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் இருந்து, மிக அதிக அளவில் நன்மைகளை வழங்கி, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்து விடுவார்.

குரு, கேது பகவானுடன் இணைந்து இருப்பதால், நீங்கள் ஆன்மீகப் பயணங்களையும், குல தெய்வ வழிபாட்டினையும் தொடரும் வாய்ப்புகள் உண்டாகும். மனதில், தொடர்ந்து தெய்வத்தை வைத்து இருக்கவும். தீர்த்த யாத்திரைகள், மலைகளில் இருக்கும் கோவில்கள் ஆகியவைகளுக்குச் சென்று வரும் வாய்ப்புகள் பிரமாதமாக உள்ளன.

குரு பகவான் தொடர்ந்து, தன்னுடைய ஐந்தாம் பார்வையாக மேஷ ராசியைப் பார்த்துக் கொண்டு இருக்க உள்ளார். இதனால், தொழில் மூலம் வரும் வருமானத்திற்கு குறை இருக்காது. மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். ஈடுபடும் காரியங்களில் வெற்றி உண்டாகும்.

ஆக மொத்தம், இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் கடக ராசிக்கு, நூற்றுக்கு 93% நன்மைகள் மட்டுமே நடக்கும். மேலும், பல நன்மைகள் நடக்க, தெட்சிணாமூர்த்தி, கணபதி மற்றும் தெட்சிணா மூர்த்தியை தொடர்ந்து வணங்கவும். மறக்காமல், குல தெய்வ வழிப்பாட்டினை மேற்கொள்வது நல்லது.